Friday, August 21, 2015

நான் ஏன் மே பதினேழு இயக்க உறுப்பினரில்லை? – உமர்

மே 17 இயக்கத்தின் தோழர்களுக்கு,
வணக்கம்.

நான் உமர். ஜூன் 2011 முதல் ஆகஸ்ட் 25, 2014 வரை தங்கள் இயக்கத்தில் உறுப்பினராய் இருந்தவன். ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றியவன். நான் தங்கள் அமைப்பை விட்டு விலகிய போது, நான் பதிவிட்ட காரணம் தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் நான் அவற்றை இதற்கு முன் பகிர்ந்து கொண்டதில்லை. தற்பொழுது, உங்களிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்தக் கடிதம்.

கடிதத்தின் நீளம் கருதி, இதனை PDF ஆக மாற்றி பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டியை இந்தப் பதிவின் கடைசியில் பகிர்ந்திருக்கின்றேன். கடிதத்தில் இருக்கும் தகவல்களை தனித்தனி பதிவுகளாக இந்த வலைப்பூவில் இடுகின்றேன். முதல் பதிவாக, கடிதத்தின் பகுதி 2.3 னை இங்கு பதிகின்றேன்.


2.3. தமிழர் தீர்மானத்தை குழி தோண்டி புதைத்த திருமுருகன்.

2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மே பதினேழு இயக்கம் தமிழர் தீர்மானம் ஒன்றினை வெளியிட்டது உங்களுக்கு அது நன்றாகத் தெரியும். [150] , அந்தத் தீர்மானத்தை குப்பைத் தொட்டிக்கு அனுப்பிய முழுப்பங்கும் திருமுருகனையேச் சாரும். அதிலும், அதைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதற்கு அவர் கையாண்ட விதம் ஏற்கனவே ப்ரேமென் தீர்ப்பாயத்தில் இந்தியா குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் இந்தியாவின் அரசுத்தரப்பு வாதத்தை சமர்ப்பித்தது போன்ற குயுக்தியான வழிமுறையை தான் இங்கேயும் பின்பற்றியிருந்தார்.  நடந்தவற்றை வரிசையாகக் கூறுகின்றேன்.

2.3.1. தீர்மானம் உருவாக்கம்

இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தயாரிக்க வேண்டும் என்பதை 2013-ம் ஆண்டிலிருந்தே நான் கூறிவந்துள்ளேன். தமிழர்களின் கோரிக்கைகளை ஒரு தீர்மானமாக உருவாக்கி, உலகெங்கும் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஒருமித்த குரலில், “தமிழர்களின் தீர்மானம் இது, இதனை சர்வதேசம் அங்கீகரித்து, இதன் அடிப்படையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும்” என்று சர்வதேசத்தை கோருவதற்கான ஒரு வடிவமாக இதனை முன்னெடுக்கலாம் என்று கூறி வந்தேன்.  அப்பொழுது இது தொடர்பாக பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களிடமும் பேசிவந்தோம். அனைவருமே, "இது மிகச்சிறப்பான நகர்வாக இருக்கும், இதனை நாம் செய்வது முக்கியமானது" என்று கருத்து தெரிவித்தனர். அதனடிப்படையில் பல்வேறு தோழர்களுடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் இந்தத் தீர்மானத்தினை உருவாக்கி அதனை "தமிழர்களின் ஒற்றைக்குரலாக முன்வைப்போம்" என்று முடிவு செய்தோம். அந்தத் தீர்மானத்தினை தயாரிக்கும் முதல் கட்டப்பணியினை நான் ஏற்றுக்கொண்டேன். அதாவது, தீர்மானத்தில் என்னென்ன விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படை, இதை ஒருBase Draft என்பதாகவைத்துக்கொள்ளலாம் என்று கூறினேன். இந்த Base Draft-ஐ [151] நான் அடுத்த நாளே உருவாக்கினேன்.

அதனை தோழர் பிரபுகண்ணனிடம் கொடுத்து அவரிடம் பல்வேறு ஈழ ஆதரவு செயல்பாட்டாளர்களின் பெயர்களையும் கூறி, அவர்கள் அனைவருக்கும் இதனை அனுப்பிவிடும்படி கூறினோம். நீங்களே எனது வீட்டில் இருந்து அனுப்பி விடுங்கள் என்று பிரபுகண்ணன் கூறினார். நானும், திருமுருகனும்அப்பொழுது (2013 டிசம்பரில்) பிரபுகண்ணனோடு அவரது வீட்டில் தான் இருந்தோம்.

இந்தத் தமிழர் தீர்மானம் தொடர்பான தொடர்பாடல்களுக்காகவே ஒரு தனி மின்னஞ்சல் முகவரி (tamilparithi70@gmail.com) ஒன்றினையும் ஏற்கனவே ஜெர்மனியில் இருந்த பொழுது உருவாக்கியிருந்தோம். அப்பொழுது அங்கு அந்த மின்னஞ்சல் முகவரியை நாங்கள் திறப்பதற்கான சூழல் இல்லாததால், பிரபுகண்ணனின் வீட்டில் இருந்த அவரது கணினியில், அவரது மின்னஞ்சலை அவர் திறந்து தந்தார். இது நடந்தது டிசம்பர் 16, 2013 அன்று. திருமுருகன் அங்கு உட்கார்ந்து அந்த base draft-ஐ இணைத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு மின்னஞ்சல் முகவரிக்கும், வேறு பல்வேறு செயல்பாட்டாளர்கள் குறிப்பாக, (தமிழ்நெட் ஆசிரியர்) ஜெயா தோழர் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களையும் அதில் இணைத்து பிரபுகண்ணன் மின்னஞ்சலில் இருந்து திருமுருகன் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். அந்த மின்னஞ்சல் அனுப்பபட்டதின் அடுத்த கட்டமாக திருமுருகன் என்ன செய்தார் என்றால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு ஏற்கனவே உருவாக்கிய tamilparithi70மின்னஞ்சலைத் திறந்து அதில் பிரபுகண்ணனை மட்டும் நீக்கி விட்டு மற்றவர்களுக்கு அதே மின்னஞ்சலை அனுப்பினார். இந்த உரையாடல்களில் பிரபுகண்ணன் இருக்க வேண்டாம் என்று திருமுருகன் அன்று முடிவு செய்தார்.

இதையே தான் அவர் ப்ரேமென் தொடர்பான விடயத்திலும் செய்தார். முதலில் பிரபுகண்ணன் மூலமாகத் தான் எனக்கு அழைப்பு வந்தது. பிறகு திருமுருகன் நேரடியாக நான் ஜெயாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று பிரபுகண்ணனை ஒதுக்கி விட்டார். "இது போன்ற ஒரு தீர்மானம் உருவாக்கும் வேலை நடைபெறுகின்றது" என்று பிரபுகண்ணனுக்கும் தெரியும். ஆனாலும் பிரபுகண்ணனை அந்த மின்னஞ்சல் குழுமத்திலிருந்து நீக்கி விட்டு மற்றவர்கள் அதில் இருந்தோம்.

இந்தத் தீர்மானத்தின் இரண்டாம் வரைவை செய்து தருவதாக குமரவடிவேல்  குருபரன் ஒப்புக்கொண்டிருந்தார். நாங்கள் இரண்டாம் வரைவைக் கோரி குருபரனுக்கு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருந்தோம். பிறகு அந்தத்தீர்மானத்தில் அடுத்த கட்டமாக குருபரன் பல்வேறு மாற்றங்களை, ஐ.நா.வின் மொழிகளில் சில விஷயங்களையும் சேர்த்து அவர் ஒரு தீர்மானத்தினை 2014,  ஜனவரி 7 ல் மாற்றி அமைத்துத் தந்தார் [152]

ஆனால் அவர் அனுப்பிய மாற்றங்களை tamiparithi70 என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவில்லை. தோழர் விஜய் தான் அந்த மாற்றங்களை கொண்ட தீர்மானத்தை tamilparithi70 மின்னஞ்சலுக்கு அனுப்பினார். குருபரன் மேற்கொண்ட மாற்றத்தில் பொதுவாக்கெடுப்பு குறித்து வெளிப்படையான வாசகம் இல்லை அதே நேரத்தில் ஒருங்கிணைந்த இலங்கை குறித்தும் குறிக்கப்பட்டிருந்தது.  இந்த மாற்றங்கள் மீதும், தீர்மானத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் குறித்தும் அந்த மின்னஞ்சலில் தொடர்ச்சியான உரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டேயிருந்தன.



அப்போது 2014-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாங்கள் இடிந்தகரை சென்றுவிட்டு வந்த பின்பு, நான் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் கூடுதலாகத் தங்கியிருந்தேன். ஒருநாள் விருதுநகர் சென்றேன்.. அடுத்த நாள் திருநெல்வேலியில் தங்கியிருந்தேன். விருதுநகரில் நான் எடுத்துக்கொண்ட ஒரு மாத்திரை எனக்கு மயக்கத்தை அதிகப்படுத்தி, என்னுடைய கண் பார்வையை மங்கலாக்கியது. என்னால் படிக்க முடியவில்லை. அன்றைய தினம் tamilparithi70 மின்னஞ்சலை என்னுடைய நுழைவுச்சொல்லை லேனாவின் வீட்டில் அமர்ந்துகொண்டு சிபியிடம் [153] , கூறி திறந்து பார்த்து படிக்க கூறினேன். சிபி திறந்து பார்த்து மின்னஞ்சலில் இருப்பதைப் படித்தார். பிறகு, நான் அவரிடம் பதில் அளிக்க கூறினேன். "எனக்கு இன்று பதில் அளிக்கும் சூழல் இல்லை. ஓரிரு நாட்களில் பதிலளிக்கிறேன் என்று மட்டும் அனுப்பிவிடு” என்றேன். சிபியும் அப்படியே அனுப்பினார்.. ஏனென்றால், இந்த உரையாடலில் நான் பதில் சொல்ல வேண்டும். நான் மின்னஞ்சலை பார்க்கவில்லை என்றோ பதில் சொல்லவில்லை என்றோ எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதால், எனக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்களைக் கூட பொருட்படுத்தாமல் தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதை, ஒரு வேலையாக, மிக முக்கியமான வேலையாக வைத்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது அந்தத் தீர்மானத்தில் நாங்கள் முடிவு செய்த விடயம் என்னவென்றால், ஈழத்தில் இருக்கக் கூடிய தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்மானமாக அது இருக்க வேண்டும். அதே நேரத்தில், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வான தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு குறித்த நடைமுறையும், சர்வதேச விசாரணை இனப்படுகொலைக்கானதாகவும், இடைக்கால நிர்வாக சபை அமைப்பது உள்ளிட்டவை மிக முக்கியமாக அதில் இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டிருந்தோம்.

இதில், பொதுவாக்கெடுப்பு என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஈழத்திலிருக்கக் கூடிய தமிழர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 6-வது சட்டத் திருத்தம்[154] , இலங்கையின் குடிமக்கள் யாரேனும், தனி நாடு குறித்து பேசினால், அவர்களுடைய கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது சட்ட விதிமுறையில் இருக்கின்றது. அதனால், பொதுவாக்கெடுப்பு என்பது வேண்டும், அதே நேரத்தில் அது வெளிப்படையாக இருக்கக் கூடாது என்றொரு சிக்கலும் இருந்தது.

இதனை கவனத்தில் கொண்டு அந்தத் தீர்மானத்தில் இவற்றை உள்ளடக்குவதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் மேற்கொண்டு வந்தோம். அப்பொழுது, ஒருமுறை தோழர் ஜெயா என்னை தொடர்பு கொண்டார்.. அப்பொழுது அந்த தீர்மானம் குறித்து நாங்கள் இருவரும் விரிவாகவும் பேசினோம். அதில் நான் மிகத்தெளிவாக இருந்தேன். பொது வாக்கெடுப்பு என்பது இல்லாமல் ஒரு தீர்மானத்தினை வெளியிட முடியாது என்பதில் நான் மிக உறுதியாகவே இருந்தேன். அவரும் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் அதனை எப்படி உள்ளடக்குவது என்பதெல்லாம் குறித்து எங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.

2.3.2. மன்னார் மாவட்ட ஆயர் தீர்மானத்தை வெளியிட்டார்.

அம்மின்னஞ்சல் சங்கிலியிலிருந்த அனைத்து தோழர்களுமே இது குறித்து தான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தோம். இறுதியாக, அது ஒரு வடிவம் பெற்று 2014 மார்ச் மாதம் 5-ம் தேதியன்று மன்னார் மாவட்டத்தினுடைய ஆயர் மரியாதைக்குரிய ராயப்ப ஜோசப்பு அவர்கள் அதனை வெளியிட்டார் [155] , இதில் வேறு யாருடைய பெயரும் இடம் பெறவில்லை. மன்னார் மாவட்ட ஆயருடைய தீர்மானமாக, அவர் முன் மொழிந்த தீர்மானமாக தான் அது வெளியிடப்பட்டது.  அந்தத் தீர்மானத்தினை அவர் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் அனுப்பியும் வைத்தார். "இது தான் தமிழர்களின் கோரிக்கை, இதனை நீங்கள் தீர்மானமாக நிறைவேற்றித் தாருங்கள். அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை அல்ல" என்று கோரியிருந்தார். அவர் 2014-ல் பல்வேறு நாடுகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பினார். இது குறித்து தமிழ்நெட்டிலும் கூட செய்திவெளியானது.

2.3.3.தமிழ்நாட்டில் தீர்மானத்திற்கான ஆதரவு.

அதற்குப் பிறகு இது குறித்து இங்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழீழ ஆதரவுக்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடம் ஒப்புதல்பெற்று அவர்களையும் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளச் சொல்லிக்கேட்டு இதனை வெளியிடலாம் என்று மே பதினேழு இயக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. மன்னார் மாவட்ட ஆயர் வெளியிட்டதில் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் பற்றிய மேற்கோள் அதில் இல்லை. ஆனால், நாம் வெளியிடக் கூடிய தீர்மானத்தில் அதனையும் இணைத்துக் கொள்வோம் என்று நினைத்தேன். திருமுருகன் அப்பொழுது, இது குறித்து குருபரனிடம் பேசிவிட்டு முடிவெடுங்கள் என்று கூறினார். தோழர் குருபரனிடம் நான் மின்னஞ்சலில் கேட்டேன்.



அப்பொழுது அவர், "அப்படியே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று குறிப்பிடாமல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக நீங்கள் குறிப்பிடலாம், அதில் எந்தவிதச் சிக்கலும் இருக்காது" என்றுஅவர் தெரிவித்தார். பிறகு இதனையெல்லாம் உள்ளடக்கி தீர்மானத்தில் மாற்றங்கள் செய்தேன்.மார்ச் மாதம் 16-ம்தேதி நாம் தி.நகர் பள்ளியில் ஒரு கருத்தரங்கத்தினை நடத்தி அந்தத் தீர்மானத்தினை வெளியிட்டோம். [156]

இந்த தீர்மானம் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மார்ச் 23 அன்று நடத்தினோம். [157], அந்தக் கருத்தரங்கில் மற்ற கட்சிகள், அமைப்புகளின் ஆதரவுகளோடு வெளியிடுவோம் என்று முனைந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடுவதற்கு முன்பு மார்ச் 22 ஆம் தேதியன்று இரவு 11 மணியளவில் நானும் திருமுருகனும் ஆர்காட் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மே பதினேழு இயக்கத்தின் முன்னாள் தோழர் ராஜாராம் [158] , கூட எங்களை சந்தித்து பேசிவிட்டு சென்றார்.

அவர்  சென்ற பின்பு, நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ப்ரேமெனில் இந்தியா குறித்து தீர்ப்பு முழுமையாக வெளிவராததற்கு வைகோவின் பங்கு இருக்கிறது” என்று கூறினேன். அதற்கு திருமுருகன் “அவர் நம்மளை சந்திக்கவில்லை என்பதுனால மட்டும் எப்படி நீங்கள் சொல்ல முடியும்” என்று கேட்டார். “அப்போ அவர் 2000 த்துல தமிழின மக்களுக்கு ஆதரவா இருந்தார்னு சொல்லுறீங்களா திரு” என்று கேட்டேன். “நீங்கள் ஏன் திரும்ப 2000 பத்தியே பேசுறீங்க” என்று கேட்டார். “அதுனால தான் திரு அவர் அப்படியிருக்கிறார். 2000 க்கு பிறகு அவர் எதுவும் பேசவில்லை. இன்று தீர்மானத்துக்கும் அவர் ஆதரவ தர மறுக்கிறார்” என்றேன். அதற்கு “இல்லை ஆதரவை நான் வாங்கிக்கிறேன், நீங்கள் தீர்மானத்தை மட்டும் பாருங்கள். ஆதரவு வாங்கும் வேலையெல்லாம் நானே பார்த்துகிறேன்” என்றார். சரி என்று நானும் வந்துவிட்டேன். அடுத்த நாள் நான் அவரை சமாதானபடுத்தும் விதத்தில் “தோழமையுடன் தமிழ் செல்வன்” பதிந்த ஒரு நிலை தகவலை பதிந்தேன். அப்பொழுது தீர்மானமாவது வெளிவரட்டும் என்பதற்காக எந்த விதமான சண்டையும் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அப்பொழுது அந்த தீர்மானத்தினை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டோம். [159]



அதற்கு ம.தி.மு.கவின் ஆதரவு இருந்ததாக கூறினார் ஆனால் ம.தி.மு.கவில் இருந்து யாரும் வரவில்லை. திருமுருகனின் வார்த்தையை மட்டும் அடிப்படையாக வைத்து ம.தி.மு.க ஆதரித்தது என்று நாம் போட்டு கொண்டோம்.

2.3.4. தனது ஈழ விரோத செயல்பாட்டை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய திருமுருகன்

 தமிழர் தீர்மானத்தைப் பொறுத்தவரை முதல் கட்டமாக தீர்மானத்தை ஈழத்தில் இருந்து மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் ராயப்பு வெளியிட்டார். அதற்கு அடுத்த இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு அமைப்புகளின் ஆதரவைபெற்று தமிழ்நாட்டிலும் வெளியிட்டோம். மூன்றாம் கட்டமாக புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஈழத்தமிழர் இயக்கங்களின் ஒப்புதலையும் இதற்கு பெறவேண்டும் என்ற முயற்ச்சியினை இதற்கு மேற்கொண்டோம். அப்பொழுது தோழர் ரதீஷ்குமார் இந்த வேலையினை மேற்கொண்டார். தோழர் கிருஷ்ணா சரவணமுத்துவிடம் [160] ஒரு மின்னஞ்சலை அனுப்பினார்.

இந்த உரையாடல்கள் tamilparithi70 மின்னஞ்சலில் அல்லாமல், எங்களுடைய மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவே நடைபெற்றன. அப்பொழுது நடைபெற்ற மின்னஞ்சல் உரையாடல் மிக முக்கியமானது தோழர்களே. அதனை சற்று கவனியுங்கள் நான் அதனை ஒவ்வொரு பகுதியாக இங்கு இடுகின்றேன். புலம்பெயர் அமைப்புகளிடம் ஆதரவு பெற வேண்டும் என்று ரதீஷ் போட்டவுடன், திருமுருகன் அங்கு வந்து தனது கருத்தை பதிவு செய்தார். இது மிக முக்கியமானது. அதற்கான ஆதரவு பெற்றால் நல்லது என்று நிறைவு செய்தார்.

உடனடியாக கிருஷ்ண சரவணமுத்து பல்வேறு ஈழ ஆதரவு இயக்கங்களிடம் பேசிவிட்டு, புலம்பெயர் அமைப்புகள் இதனை ஏற்றுகொள்கிறார்கள் என்று தகவலை தெரிவித்தார்.

அடுத்தது ஈழத்தில் இருக்ககூடிய TNPF தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய ஆதரவும் இதற்கு இருக்கிறது. வெளியிடலாம் என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். அதே நேரத்தில் அவர் ஒரு கருத்தை தெரிவித்தார். TYO – Canada தமிழ் இளையோர் அமைப்பு, கனடா இந்த தீர்மானத்தில் Referendum என்ற ஒரு வார்த்தையை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். பொதுவாக்கெடுப்பிற்கான நடைமுறைகள் அதில் பட்டியலிடப்பட்டிருந்தாலும் கூட பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் அப்பொழுது தான் ஆதரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.


அப்பொழுது நான் பொதுவாக்கெடுப்பு என்ற வார்த்தையை நேரடியாக பயன்படுத்தும் பொழுது அது ஈழத்தில் இருக்க கூடியவர்களுக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அது 6 வது சட்டதிருத்ததிற்கு எதிரானதாக இருக்கும். இதனை நீங்கள் TNPF டம் கேளுங்கள். அவர்களுக்கு சரி என்றால் நாம் இதனை மேற்கொண்டு எடுத்து செல்லலாம் என்று கூறினேன். இந்த மின்னஞ்சலை நான் அனுப்பிய நேரம் 25 ஆம்தேதி மாலை 7 மணி 9 நிமிடத்திற்கு.

உடனடியாக திருமுருகன் எனக்கு போன் செய்து, இப்பொழுது இருக்கும் தீர்மானத்தை ஜெயா கேட்டார். நீங்கள் அவருக்கு அனுப்பிவிடுங்கள். எனக்கும் ஒரு காப்பி(Copy) அனுப்பிவிடுங்கள் என்று கூறினார். நானும் சரி என்று திருமுருகனுக்கும்,  விஜய்க்கும் மின்னஞ்சல் அனுப்பி ஜெயா தோழருக்கு அனுப்பிவிடுங்கள் என்று குறிப்பிட்டு உடனடியாக அந்த மின்னஞ்சலை 25 ஆம் தேதி மாலை 7 மணி 11 நிமிடத்திற்கு அனுப்பிவிட்டேன்.


சில நிமிடங்களிலேயே கிருஷ்ணா சரவணமுத்து பதிலளித்தார். TNPF க்கு Referendum என்னும் வார்த்தையில் சிக்கல் இருப்பதாக கூறவில்லை. அவர்களும் அதனை சரி என்று தான் கூறினார்கள் என்று தெரிவித்தார். அப்படியென்றால் இந்த திருத்தத்தை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று நான் Reply All என்பதற்கு பதிலாக அதனை Reply மட்டும் க்ளிக் செய்து கிருஷ்ணாவுக்கு பதில் அளித்திருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு கிருஷ்ணா எனக்கு பதில் அனுப்பியிருந்தார் “சகோதரரே அது எனக்கு மட்டும் தான் வந்திருக்கிறது என்று”. அப்பொழுது நான் வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலை திறந்து பார்த்தேன். அப்பொழுது கிருஷ்ணாவின் பதில் வந்திருந்தது. அதே நேரத்தில் (இரவு 9:46க்கு) திருமுருகன் அடுத்த தகவலை அதில் பதிந்திருந்தார். அது தான் நஞ்சு.

அது என்னவென்றால் “ஜெயா தோழர் இந்த தீர்மானத்தை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்று கூறினார். நாளைக்குள் அதனை தந்துவிடுவதாக உறுதியளித்திருக்கிறார். அதனால் அவர் பதில் அளிக்கும் வரை காத்திருப்போம்” என்று கூறினார்.


உடனடியாக கிருஷ்ணாவும் பதிலளித்தார்.  ஓ...  இப்பொழுது இதில் ஜெயா தோழர் சம்பந்தப்படுவது மிக முக்கியமானது. அவர் அவருக்கான நேரத்தை எடுத்து கொள்ளட்டும்.  கண்டிப்பாக அவருடைய பதிலை பெற்ற பிறகு நாம் தொடருவோம் என்று கூறினார். ஏனெனில் ஜெயா தோழரின் பங்களிப்பு முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.


இங்கே புலம்பெயர் அமைப்பினுடைய ஆதரவும், ஈழத்தில் இருக்ககூடிய அமைப்பின் ஆதரவும் ஒரு சேர கிடைக்கும் என்ற சூழல் வந்தவுடன் இது அடுத்த கட்டத்துக்கு நகர கூடாது என்று திட்டமிட்டு, யாருடைய பெயரை பயன்படுத்தினால் அனைவரும் அதற்கு பிறகு யாரும் செயலாற்ற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு தோழர் ஜெயாவின் பெயரை பயன்படுத்தி இந்த தீர்மானத்திற்கான ஆதரவை பெறும்முயற்சியினையும், தீர்மானத்தினை இன்னும் பரவலாக எடுத்து செல்லும் முயற்சியினையும் அப்படியே தடுத்து நிறுத்திவிட்டார். சரி அடுத்த நாள் வந்துவிடும் என்று தான் நானும் கூட நினைத்து கொண்டேன்.  இவர் தோழர் ஜெயாவுடன் பேசியிருப்பார் என்று தான் நினைத்துகொண்டேன். அதற்கு பிறகு அது குறித்து எந்த விதமான நகர்வுகளும் இல்லை.

2014 மே மாதம் 27 ஆம் தேதியன்று நான் இன்னொரு தகவல் பேசும் பொழுது நான் “அப்படியென்றால் தமிழர் தீர்மானம் குறித்து என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?” என்று கேட்டேன். அன்று எங்களுக்குள் ஒரு வாக்குவாதம் நடைபெற்றது. அன்று மிக கோபமாக “தமிழர் தீர்மானம் பற்றி எல்லாம் இனிமேல் பேசாதீர்கள். அது எல்லாம் ஒன்றும் நடக்காது” என்று கூறினார். நான் ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டேன். அப்பொழுது நினைத்தேன் தோழர் ஜெயாவிடம் பேச வேண்டும் என்று. இவர் உண்மையிலேயே தோழர் ஜெயாவிடம் பேசி விட்டு தான் ப்ரேமனிலும், தமிழர் தீர்மான விடயத்திலும் ஜெயாவினுடைய பெயரை பயன்படுத்தினாரா அல்லது அவரிடம் பேசாமலேயே அவருடைய பெயரை பயன்படுத்தி இந்த வேலைகளை நடைபெறாமல் செய்திருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள நினைத்தேன். ஆனால் ஜெயாவிடம் உடனடியாக பேச வேண்டாம், முழுமையாக அனைத்து தகவல்களும் தெரிந்த பிறகு அவரிடம் பேசுவோம் என்று நான் முடிவு செய்து கொண்டேன்.

இந்த ஆண்டு 2015, ஏப்ரல் மாதத்தில் நான் தோழர் ஜெயாவிடம் பேசினேன். அப்பொழுது நான் “தோழர் தமிழர் தீர்மானம் தொடர்பாக, நீங்கள் ஏதாவது மாற்றி தருகிறேன் என்று திருமுருகனிடம் கூறினீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லையே ”நாங்க தான் அந்த தீர்மானத்தையே தமிழ் நெட்டில் வெளியிட்டுடோமே” என்றார். வெளியிட்டதுக்கு பிறகு அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதனை நாங்கள் வெளிப்படையாகவே அறிவிப்போம். மாற்றம் பண்ணி தருகிறோம் என்றெல்லாம் நாங்கள் நிறுத்த மாட்டோம். அப்படி சரி செய்து தரேன்னு நான் பேசவில்லை என்றார். ஜெயா தோழர் உறுதியாக மறுத்துவிட்டார், திருமுருகன் தன்னிடம் இது குறித்து பேசவே இல்லை என்றும் தெரிவித்தார். அப்பொழுது எனக்கு திருமுருகன் ஜெயா தோழரின் பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்று உறுதியாக தெரிந்தது.

ஏனெனில் அந்த தீர்மானத்தில் இருக்க வேண்டிய முக்கியமான பகுதிகள் குறித்து நானும் ஜெயா தோழரும் தான் பேசியிருக்கிறோம். நேரடியாகவே பேசியிருக்கிறோம். அப்படி இருக்கையில் இதனை இன்னும் வலுவாக்க வேண்டும் என்று எப்படி கூறியிருப்பார் என்று எனக்கு 2014 மே மாதத்தில் திருமுருகனிடம் பேசிய பின்பு தான் தோன்றியது. இந்த இடத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பினை ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி தடை செய்திருக்கிறார் என்றால் இவருடைய செயல் எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் நிறைந்தது?. இவரா தமிழீழ விடுதலைக்காக போராட போகிறார் ? நீங்கள் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான செயல்களை மேற்கொள்ளும் ஒருவரை நம்பி தான் தோழர்களே மே பதினேழு இயக்கம் நேர்மையான இயக்கம் என்று கூறி கொண்டிருக்கின்றீர்கள். ஜெயா தோழரின் பெயரை பயன் படுத்தி ஒன்றல்ல இரண்டு தருணங்களில் தமிழீழ விடுதலைக்கான முன் நகர்வினை முறித்து கொண்டிருக்கின்றார். இப்படி பட்ட அயோக்கியச் செயலை  அம்பலப்படுத்துவதற்கான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று பொறுமையாக காத்து கொண்டிருந்தேன்.

ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்பதற்காக tamilparithi மின்னஞ்சலை திறந்து அதிலிருந்து உரையாடல்களை screenshot எடுக்கலாம் என்று நான் 2015ஏப்ரலில் முயன்ற போது தான் தெரிந்தது, திருமுருகன் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உரிய கடவுச்சொல் தொடங்கி அனைத்து தகவல்களையும் மாற்றிவிட்டார் என்று. (சில வாரங்களுக்கு முன், தமிழர் தீர்மானத்தை உருவாக்கிய குழுவில் இருந்த தோழர் ஒருவரிடம் இருந்து இங்கிருக்கக்கூடிய சில screenshot களைப் பெற்றேன்) சரி தமிழர் தீர்மானத்தின் base draft பிரபுகண்ணனின் மின்னஞ்சலில் இருக்கும், அவரிடம் இருந்து பெறலாம் என்று கருதி 2015 மே மாதத்தில் அவருக்கு போன் செய்தேன். பிரபு கண்ணன் தனது மின்னஞ்சலை திறந்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து விட்டார். ஏனெனில், அவருடைய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் SentMail ல் இல்லை. வேறு எந்த folder களிலும் கூட இல்லை. குறிப்பிட்ட தேதியை கொடுத்து தேடிப்பார்த்தும் கூட, அதற்கு முந்தைய பிந்தைய வாரங்களிலும் தேடி பார்த்தும் அந்த base draft இல்லை. அது முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.

அப்படியென்றால் திருமுருகன், பிரபுகண்ணனின் மின்னஞ்சல் கணக்கில் இருந்து மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, அப்பொழுதே பிரபுகண்ணனின் மின்னஞ்சல்களை அழித்திருக்கின்றார். திருமுருகன் இந்த அளவிற்கு வஞ்சகமாய் செயல்களை மேற்கொள்வதை பார்க்கும் பொழுது, அவரது ரத்தம், சதை, நாடி, நரம்பு, எல்லாம் அயோக்கியத்தனம் நிறைந்திருப்பது போல் தான் எனக்கு தெரிகின்றது. இவரா ஈழவிடுதலைக்கு நேர்மையாக போராடுபவர் என்று கூறுகின்றீர்கள்? ஆக்கபூர்வமான செயல்களை முறியடிப்பதற்கு, ஜெயா தோழரின் பெயரை ஒருவர் பொய்யாக பயன்படுத்துகிறார் என்று தெரிந்தாலே போதும், அவர் யாரால் இயக்கப்படுபவர் என்று கூறிவிடலாம். என்னிடம் தோழர் ஜெயாவின் பெயரை இரண்டு முறை பொய்யாக பயன்படுத்தியவர், இன்னும் எத்தனை எத்தனை இடங்களில் இப்படி செய்தாரோ? ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்னவர் உங்களிடம் மட்டும் உண்மையா சொல்லிவிடப் போகிறார்?

யாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்கள் மறுபேச்சு பேசாமல் கேட்டுக்கொள்வார்களோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், மற்றவர்களால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாதோ, யாருடைய பெயரை பயன்படுத்தினால், அவரை தொடர்பு கொண்டாலும், நீங்கள் இப்படிச் சொன்னீர்களா என்று சரிபார்க்க மாட்டார்களோ, இவற்றையெல்லாம் விட யாருடைய பெயரை பயன்படுத்தினால், உண்மை தெரிய வந்தாலும், பயன்படுத்தப்பட்ட பெயரை வெளியில் சொல்ல முன்வரமாட்டார்களோ,      அவரது பெயரை பயன்படுத்தி ஆக்கபூர்வமான வேலைகளை தடுக்கும் அயோக்கியத்தனமான செயலை மேற்கொள்ளும் திருமுருகன், ஜெயா தோழரின் பெயரை நான் பொதுவெளியில் பயன்படுத்தமாட்டேன் என்ற எண்ணத்தில்தான் தொடர்ந்து தவறுகள் செய்வதற்கு ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தியிருக்கின்றார். திருமுருகன் கூறிய பொய்களை நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தொடர்புகளின் மூலம் (திருமுருகன் மற்றும் அவரது அடிப்பொடிகள் தவிர்த்து) ஜெயா தோழரிடம் சரிபார்த்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமுருகன் இப்பொழுது கூட, அடுத்த பொய்யாக “ஜெயா தோழரிடம் இப்பொழுதுதான் பேசினேன்; உமரிடம் அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை என்று கூறினார்; உமர்தான் பொய் சொல்லியிருக்கின்றார்” என்று ஜெயா தோழரை யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்னும் எண்ணத்தில் இன்னும் அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விடுவார்.

ஆக்கபூர்வமான வேலைகளைத் தடுப்பதற்காக ஜெயா தோழரின் பெயரை பயன்படுத்தி பொய் சொன்ன திருமுருகன், நேர்மையானவர் என்று நம்புவதும், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டும் என்று நம்புவதும் ஒன்றுதான்.

*********************************************

இந்தப் பதிவில் வெளியாகியிருப்பது ஒரு சிறிய பகுதியே. இன்னும் பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய முழு பதிவையும் PDF வடிவில்  தரவிறக்க இங்கே க்ளிக் செய்யவும்.